அரசு பஸ் ஓட்டுநர், நடத்துநருக்கு தபால் ஓட்டுரிமை கிடைக்குமா? தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை
அரசு பஸ் ஓட்டுநர், நடத்துநருக்கு தபால் ஓட்டுரிமை கிடைக்குமா? தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை
ADDED : மார் 09, 2026 06:48 AM

மதுரை: “தொலைதுார அரசு பஸ்களில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர்கள், தேர்தல் நாளில் பணியில் இருப்பதால், தபால் ஓட்டுரிமை கிடைக்குமா,” என கோரிக்கை எழுப்பி உள்ளனர்.
தமிழகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பிரிவுகளில் பணியாற்றுகின்றனர்; 500 கி.மீ., வரையான தொலைதுார பஸ்களை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள், அதிகாலை முதல் நள்ளிரவு வரை பணியாற்றுகின்றனர்.
தேர்தல் நாளில் வெளியூரில் இருக்க நேரிட்டால், அவர்களால் ஓட்டளிக்க முடிவதில்லை. மதுரை மண்டலத்தில் மட்டும் 5,480 ஓட்டுநர்கள், நடத்துநர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், தொலைதுார பஸ்சில் பயணிக்கின்றனர். இவ்வகையில் மாநில அளவில் 50,000 பேரின் ஓட்டுகள் தேர்தலில் வீணாகின்றன.
இது குறித்து அரசு பஸ் ஓட்டுநர், நடத்துநர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு தேர்தலின்போதும், தபால் ஓட்டுரிமை தருமாறு கோரிக்கை வைக்கிறோம். ஆனால், தேர்தல் கமிஷன் கண்டு கொள்வதே இல்லை.
'வரும் சட்டசபை தேர்தலிலாவது, நாங்கள் தபால் ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
தமிழ்நாடு போக்குவரத்து எச்.எம்.எஸ்., தொழிலாளர் சங்க நிர்வாகி அங்குசாமி கூறுகையில், “கடந்த 1998 முதலே, பல்வேறு தொழிற்சங்கங்கள் தபால் ஓட்டு கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா என எந்தத் தேர்தலிலும் எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை,” என்றார்.
அரசு போக்குவரத்து கழக உயரதிகாரிகள் கூறுகையில், 'பணிமனைகளில், அலுவலர்கள், பராமரிப்பு பிரிவில் பணியாற்றுவோருக்கு ஓட்டளிக்க, தேர்தல் நாளில் ஒரு மணி நேர சிறப்பு அனுமதி உள்ளது.
'பிற மாநிலங்களைப் போல், நீண்ட துாரம் செல்லும் விரைவு பஸ்களில் பணியில் இருக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தபால் ஓட்டு வழங்கும்படி தலைமைச் செயலகத்திற்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளோம்' என்றனர்.

