'தேர்தல் வந்தால் தான் பொங்கல் பரிசு வழங்கப்படுமா?'
'தேர்தல் வந்தால் தான் பொங்கல் பரிசு வழங்கப்படுமா?'
UPDATED : ஜன 24, 2026 12:15 PM
ADDED : ஜன 24, 2026 06:16 AM

சென்னை: “தேர்தல் வந்தால்தான் பொங்கல் பரிசு தொகை கொடுப்பீர்களா,” என, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - உதயகுமார்: ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை வருகிறது. ஆனால், இந்த ஆண்டுதான் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் வந்தால்தான், தி.மு.க., அரசுக்கு மக்கள் நினைவுக்கு வருவரா?
அமைச்சர் சக்கரபாணி: அ.தி.மு.க., ஆட்சியில் பொங்கல் பரிசாக, ஒரு கரும்பை நான்காக வெட்டி கொடுத்தனர். இப்போது முழு கரும்பு வழங்கப்படுகிறது.
உதயகுமார்: பொங்கல் பரிசாக 100 ரூபாயும், கரும்பும் முதல் முதலாக வழங்கினோம். பின், முழு கரும்பு வழங்கினோம். பழனிசாமி முதல்வராக இருந்தபோது, பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது, 3,000 ரூபாய் தான் வழங்கியுள்ளீர்கள். 5,000 ரூபாய் கொடுத்திருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பர்.
அமைச்சர் சக்கரபாணி: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4,000 ரூபாயும், மளிகைப் பொருட்களும் கொடுத்தோம். தேர்தலுக்காக கொடுக்கவில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.

