முதல்வருக்கு வானளாவிய அதிகாரம் வந்துடுமா? மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன் கேள்வி
முதல்வருக்கு வானளாவிய அதிகாரம் வந்துடுமா? மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன் கேள்வி
UPDATED : ஜூலை 11, 2025 05:24 PM
ADDED : ஜூலை 11, 2025 05:11 PM

திருநெல்வேலி: 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல்வருக்கு வானளாவிய அதிகாரம் வந்துடுமா? என திருநெல்வேலியில் நிருபர்கள் சந்திப்பில் மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் திருநெல்வேலி வந்திருந்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். திருநெல்வேலியில் மாநில பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு சென்றார். நடுக்கல்லூரில் கோவில் நிகழ்வில் பங்கேற்றார். திருநெல்வேலியில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நல்லதே போற்றப்பட வேண்டும். சமுதாயத்திற்கு ஊறு விளைவிப்பதை எதிர்க்க வேண்டும். இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொருவருக்குமான அதிகாரத்தை வரையறுத்துள்ளது. முதல்வருக்கு மகத்தான அதிகாரங்கள் உள்ளன. அதிகாரங்களை முறையாக பயன்படுத்தினால் மாநில மக்களுக்கு எத்தனையோ நன்மைகளை செய்ய முடியும்.
கவர்னர்களுக்கு இருக்கும் ஒன்றிரண்டு அதிகாரங்களுக்குள் புகுந்து அது கூட இருக்கக் கூடாது என்ற நினைப்பது சிறந்த அணுகுமுறை அல்ல. அரசியல் சாசனப்படி கவர்னர் தான் ஒரு மாநிலத்தின் முதல் குடிமகன் ஆவார். மதச்சார்பற்ற தன்மை என்பது யார் மனதும் புண்படாமல் செயல்படுவது தான். ஒருவர் மற்றவர் நம்பிக்கையை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு தான் உள்ளது என கேரள வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. நான் நான்கு மாநிலங்களில் கவர்னராக இருந்திருக்கிறேன். அவை காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி செய்யும் மாநிலங்களாகும். அங்கெல்லாம் இத்தகைய பிரச்னைகள் வரவில்லை.
கவர்னர், முதல்வரின் அதிகார வரம்புக்குள் வரக்கூடாது என கூறுபவர்கள், கவர்னரின் அதிகார வரம்புக்குள் முதல்வர் வரக்கூடாது என்பதான் சரியான அணுகுமுறை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல்வருக்கு வானளாவிய அதிகாரம் வந்துடுமா?அப்படியானால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு தான் அதிக அதிகாரம் என எதேச்சதிகாரமாக நடந்து கொள்ள முடியுமா? இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.