ஒரு விஷயத்தை 2 மணி நேரம் பேசுவதா? பிரேமலதா கோபம்
ஒரு விஷயத்தை 2 மணி நேரம் பேசுவதா? பிரேமலதா கோபம்
ADDED : செப் 04, 2026 03:12 AM

''சட்டசபை சண்டை சபை கிடையாது,'' என, தே.மு.தி.க., - பிரேமலதா பேசினார்.
சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
தே.மு.தி.க., - பிரேம லதா: சட்டசபையில் இருப்பவர்கள், எதிர்க்கட்சிகள் தானே தவிர எதிரிக்கட்சிகள் கிடையாது. 2 மணி நேரம் ஒரே கருத்தை முன்வைத்து விவாதம் நடந்தது.
மாறி மாறி சண்டை போட, இது சண்டை சபை கிடையாது; சட்டசபை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், முதல்வர் இன்று சபையில் இருப்பதால், மீண்டும் பிரச்னையாக மாறுகிறது.
அமைச்சர் கீர்த்தனா: சண்டை சபை என சொல்லும் அளவுக்கு இல்லை. இதேபோல, மறைந்த தலைவர் விஜயகாந்திற்கு நடந்திருந்தால், பிரேமலதாவும் எழுந்து கண்டிப்பான குரல் கொடுத்திருப்பார்.
தே.மு.தி.க., - பிரேமலதா: அப்போது விஜயகாந்த், சட்டசபையில் பால் கட்டணம், பஸ் கட்டணம் உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்தார். அது, திசை திருப்பப்பட்டு, சண்டையாக மாறியது. இதுதான் வரலாறு. மீண்டும் அதே வரலாறு திரும்ப வேண்டுமா?
மாற்றம் கொண்டு வருவோம் என்று சொன்ன நீங்கள், மாற்றத்தை கொண்டு வர வேண்டாமா? கருத்துக்கு கருத்து தெரிவிக்கலாம். அதற்காக, 2 மணி நேரம் ஒரே கருத்தை பேசக் கூடாது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
