சத்துணவுடன் முட்டை வழங்குதில் சிக்கல் :தென்னிந்திய லாரி ஸ்டிரைக் எதிரொலி
சத்துணவுடன் முட்டை வழங்குதில் சிக்கல் :தென்னிந்திய லாரி ஸ்டிரைக் எதிரொலி
ADDED : ஆக 18, 2011 12:33 AM

நாமக்கல் : தென்னிந்திய அளவிலான லாரி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் நலச்சங்கம், முதல் இரு நாள் ஆதரவு தெரிவித்துள்ளது.
அதன் எதிரொலியாக, ஆறு கோடி முட்டைகள் தேக்கமடையும் சூழல் உருவாகியுள்ளதுடன், 12 கோடி ரூபாய் வர்த்தகமும் முடக்கமாகியுள்ளது. அதனால், சத்துணவு திட்டத்துக்கு முட்டை அனுப்புவதில் சிக்கல் உருவாகியுள்ளது. நாமக்கல் மண்டலத்தில், 800க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன. அதன் மூலம் நாள்தோறும், 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகளில், 70 லட்சம் முட்டைகள் சத்துணவு திட்டத்துக்கும், 70 லட்சம் முட்டைகள் கேரளாவுக்கும், 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மீதமுள்ள முட்டைகள், உள்ளூர் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கோழிப் பண்ணைகளில் இருந்து சராசரியாக, இரண்டு ரூபாய் வீதம் ஒரு முட்டை விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நாமக்கல் மண்டலத்தில் நாளொன்றுக்கு, ஆறு கோடி ரூபாய் மதிப்பில் முட்டை உற்பத்தி மூலம் மட்டும் வர்த்தகம் நடக்கிறது. இந்நிலையில், சீரான சுங்கவரி வசூல், டீசல் விலை குறைப்பு, சரக்கு இல்லாமல் காலியாக செல்லும் வாகனங்களுக்கு, 25 சதவீதம் மட்டும் சுங்கவரி வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, இன்று நள்ளிரவு முதல் தென்னிந்திய அளவில் லாரி வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இப்போராட்டத்துக்கு, சரக்கு புக்கிங் ஏஜன்ட் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதுபோல், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் உரிமையாளர் நலச்சங்கத்தினரும், லாரி வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, இன்று நள்ளிரவு மற்றும், 19, 20ம் தேதி ஆகிய இரு தினங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால், இரு தினங்களில், 6 கோடி முட்டைகள் தேக்கமடையும் அபாய சூழல் உருவாகியுள்ளது. அதன் எதிரொலியாக, 12 கோடி ரூபாய் மதிப்பிலான முட்டை வர்த்தகமும் முடக்கமடையும் சூழல் உருவாகியுள்ளது. தவிர, நாமக்கல் மண்டலத்திலிருந்து சத்துணவு திட்டத்துக்கு நாள்தோறும், 70 லட்சம் முட்டைகள் வினியோகிக்கப்படுகின்றன. தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் நலச்சங்கத் தலைவர் நல்லதம்பி தெரிவித்ததாவது: இன்று நள்ளிரவு மற்றும் 19, 20ம் தேதி ஆகிய இரு தினங்களும் லாரி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, கோழிப்பண்ணையாளர்கள் ஆதரவு அளிக்கின்றனர். இரு தினங்கள் தேக்கமடையும் முட்டைகள், கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு செல்லப்படும். சத்துணவு திட்டத்துக்கு தேவையான முட்டைகள் முன்கூட்டியே அனுப்பப்படும். மேலும், 20ம் தேதி சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால், சத்துணவு திட்டத்துக்கு முட்டை அனுப்புவதில் எந்த சிக்கலும் இல்லை. இவ்வாறு நல்லதம்பி தெரிவித்தார்.

