திருப்பூர் ரயிலில் தவறி விழுந்த பெண்; தக்க நேரத்தில் உயிர் காத்த பெண் போலீஸ்!
திருப்பூர் ரயிலில் தவறி விழுந்த பெண்; தக்க நேரத்தில் உயிர் காத்த பெண் போலீஸ்!
ADDED : ஆக 29, 2025 09:05 PM

திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பெண் ஒருவர், தவறி கீழே விழுந்தார். இதைப்பார்த்ததும், ஓடி வந்த ரயில்வே பெண் போலீஸ் திவ்யா, பிளாட்பார இடைவெளியில் கீழே விழுந்த அவரை, ரயில் நிற்கும் வரை, மேலே எழுந்திருக்காமல் அசையாமல் படுத்திருக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி படுத்திருந்த சுசீலாவை, ரயில் நின்றதும் பத்திரமாக மீட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் ரயில், இன்று( ஆக.,29) அதிகாலை திருப்பூர் வந்தது. அந்த ரயில், முதலாவது பிளாட்பாரத்தில் நின்று கிளம்பும் நேரத்தில் திருப்பூரை சேர்ந்த சுசிலா(58) என்ற பெண், தனது பேத்தியுடன் இறங்க முயன்று தவறி விழுந்தார். ஆனால், ரயில் வேகமாக சென்றதால், அவர் பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் விழுந்தார்.
அப்போது பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ் திவ்யா, சுசிலா விழுந்ததை பார்த்து, உடனடியாக அருகில் சென்று அசையாமல் படுத்து இருக்குமாறு கூறினார். இதனை பொருட்படுத்தாமல் பயத்தில் சுசிலா எழ முயன்றார். இருப்பினும், திவ்யா அங்கேயே படுத்து இருக்குமாறு கூறி சுசிலாவுக்கு வழிகாட்டினார்.
பெண் ஒருவர் விழுந்ததை பார்த்த பயணி ஒருவர் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தினார். உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சுசிலாவை வெளியே தூக்கினார். அவரை உயிருடன் காப்பாற்றிய திவ்யாவுக்கு பயணிகள் மற்றும் சக போலீசார் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.