ADDED : நவ 20, 2024 06:51 AM

மதுரை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மருமகனும், வழக்கறிஞருமான காமராஜ் சென்னையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணிற்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை ஓட்டேரியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2014 ல் காமராஜ் கொலை செய்யப்பட்டார். சென்னை வெற்றிநகர் கல்பனா 50, என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். நிலப் பிரச்னை தொடர்பாக காமராஜிடம் வழக்கு ஆவணங்களை கொடுத்தார். அதை திரும்பத் தருமாறு கல்பனா கோரினார். இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் காமராஜை கொலை செய்ததாக கல்பனா உள்ளிட்ட சிலர் மீது கொரட்டூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.
வழக்கு விசாரணை திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடந்தது. வேறு மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கலானது. மதுரை நீதிமன்ற விசாரணைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2015 ல் விசாரணை துவங்கியது.
வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார். மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றம் தரப்பில்,'நவ.19 ல் உத்தரவு பிறப்பிக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம்,'உரிய காலவரம்பிற்குள் விசாரணையை முடிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.
நேற்று மதுரை முதன்மை அமர்வு நீதிபதி சிவகடாட்சம் அளித்த உத்தரவு: கல்பனா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனந்தன், கார்த்திக் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்படுகின்றனர். இவ்வாறு உத்தரவிட்டார்.