வெள்ள நிவாரணம் கோரி போராட்டம்; கடலுார், விழுப்புரத்தில் பெண்கள் கைது
வெள்ள நிவாரணம் கோரி போராட்டம்; கடலுார், விழுப்புரத்தில் பெண்கள் கைது
UPDATED : டிச 16, 2024 02:25 PM
ADDED : டிச 16, 2024 01:52 PM

விழுப்புரம்: வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அண்மையில் தமிழகத்தை தாக்கிய பெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொண்ட தமிழக அரசு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை அடிப்படையில் ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தது.
இந்நிலையில், தங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கவில்லை எனக் கூறி, விழுப்புரம் மாவட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓமந்தூர், உப்புவேலூர், கிளியனூர், வடசிறுவலூர், ஆதனப்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இன்று (டிச.,16) திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், நீண்ட வரிசைக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர், தகவல் அறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நிவாரணத்தைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்த பின்பு போராட்டம் கைவிடப்பட்டது. அதேபோல, கடலூர் சன்னியாசிபேட்டையிலும் ரூ.2000 வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலைந்து போகச் சொல்லியும் கேட்காத அவர்களை, வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே பலர் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களையும் இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
அதேவேளையில், தென்பெண்ணை ஆற்றின் கரையை பலப்படுத்தக்கோரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.