மகளிர் உரிமைத்தொகை உயரும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
மகளிர் உரிமைத்தொகை உயரும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
UPDATED : டிச 12, 2025 08:56 PM
ADDED : டிச 12, 2025 08:53 PM

சென்னை: '' பெண்கள் உயர்ந்து நடைபோடுவதற்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயம் உயரும்,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திட்டத்தின் வெற்றி
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது : வரலாற்றை திருத்தி எழுதும் வகையில் அமைந்த திட்டம் தான் மகளிர் உரிமை திட்டம். இது உதவித்தொகை இல்லை. உரிமைத்தொகை என திட்டம் துவங்கும்போது அறிவித்தோம்.
ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அதை வெற்றிகரமாக செயல்படுத்துவது மட்டும் அல்ல. அதனை பொது மக்கள் எவ்வளவு சிறப்பாக பயன்பெற்று, வாழ்க்கையை மேம்படுத்துவதில் உள்ளது. அதில் உரிமைத்தொகை பெரும் வெற்றி பெற்றுள்ளது.
பெண்களுக்கு, விடியல் பயணத்தில் ஆயிரம் ரூபாய் மிச்சமாகிறது. புதுமைப்பெண் திட்டத்தால் ஆயிரம் ரூபாய் மிச்சமாகிறது. அரசின் திட்டங்கள் மூலம் பணப்புழக்கமும், சேமிப்பு அதிகரித்துள்ளது. அரசின் திட்டங்களினால் முதலீடாக மாற்றி பொருளாதார வலிமையை பெண்கள் உயர்த்தி உள்ளனர். இதுதான் இந்த திட்டத்தின் வெற்றி.
அண்டை மாநிலங்களில்
பெண்களின் கைகளில் பணம் உள்ளதால், அவர்களின் மதிப்பு அதிகரிக்கிறது. வாழ்க்கை தரம் உயரவும் உதவுகிறது. அண்டை மாநிலங்கள் கூட இந்த திட்டத்தை செயல்படுத்த துவங்கி உள்ளது. மகளிர் உரிமைத்திட்டத்தின் வெற்றியாகும்.
இன்று 16.96 லட்சம் பேரின் கணக்குகளில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1.39 கோடி பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். தலைநிமிர்ந்த தமிழகத்தில் பெண்கள் உயர்ந்து நடைபோட மகளிர் உரிமைத்தொகை உயரும். பெண்களின் உரிமையும் உயரும்.
கல்வி தான் சிறந்த முதலீடு. யாராலும் அளிக்க முடியாத சொத்து. தலைமுறை செழிக்க பெண்கள் முன்னேற்றம், பெண் கல்வி அவசியம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

