ADDED : ஜூலை 14, 2026 04:52 AM

சென்னை: 'அஞ்ஞாடி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி என்ற பூ.மாணிக்கவாசகம், 79, வயது மூப்பால் நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு அருகில் உள்ள ஆண்டிப்பட்டியில் பிறந்த பூ.மாணிக்கவாசகம், கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பின், முழு நேர இலக்கியவாதியாகி, சிறுகதை, நாவல்களை எழுதினார். 'பிறகு, வெக்கை, வரப்புகள், வாய்க்கால், அஞ்ஞாடி' உள்ளிட்ட நாவல்களை எழுதினார்.
'அஞ்ஞாடி' நாவல், 2014ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை பெற்றது. கரிசல் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் இவர், கருவேலம் பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் எழுதிய, 'வெக்கை' நாவலை தழுவி, இயக்குநர் வெற்றி மாறன், அசுரன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இவரின் உடல் அஞ்சலிக்காக, கோவில்பட்டியில் உள்ள பாரதி நகர், மூன்றாவது மேட்டுத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில், இன்று பகல் 1:30 மணி வரை வைக்கப்பட்டிருக்கும். பிற்பகல் 3:00 மணிக்கு, ஆண்டிப்பட்டியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.
