ADDED : மார் 02, 2024 12:45 AM

சென்னை:லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு பரபரப்பாக நடந்து வரும் நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி வெளியிட்டுள்ள போஸ்டரால், காங்.,கில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், தி.மு.க., சார்பிலான கூட்டணி பேச்சில், காங்., உடனான தொகுதி பங்கீடு இழுபறியாகவே உள்ளது.
ஏற்கனவே உதயநிதியின் தலையீடு, கூட்டணிக்குள் வந்த கமல் கட்சி போன்றவை காரணமாக, காங்.,குக்கு ஒதுக்கப்படும் சீட்டு எண்ணிக்கை குறைவதாக புகைச்சல் உள்ளது.இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் 71வது பிறந்த நாள், நேற்று கொண்டாடப்பட்டது.
சிறுபான்மை பிரிவில் உள்ள நடிகரும், தயாரிப்பாளருமான ஜெ.எம்.பஷீர், சென்னை முழுதும் ஸ்டாலின் பிறந்த நாளுக்காக, 'நேற்று இன்று நாளை' என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
அதில், 'நேற்று கழக தலைவர், இன்று தமிழக முதல்வர், நாளை பிரதமர்' என புகழ்ந்து எழுதிஉள்ளார்.
தவிர, தமிழகத்திற்கு சின்ன தளபதியையும், இந்தியாவுக்கு தளபதியும் தலைமை தாங்க வேண்டும் என, பெரும்பாலான தி.மு.க.,வினர் பேசி வருகின்றனர். இது போன்ற நடவடிக்கையால், காங்., மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, காங்கிரசை தங்கள் பக்கம் இழுக்க இ.பி.எஸ்., அணி முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த இரண்டு மாதங்களில் தி.மு.க., இருக்காது என பிரதமர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இது போன்ற போஸ்டர்களை ஒட்டி, எதிர்க்கட்சியினரின் வேலையை தி.மு.க.,வினரே சுலபமாக்கி விடுவர் போலிருக்கிறது.

