‛தனித்து நிற்கிறீர்களா' என்று கேட்க மாட்டேன் என்கிறீர்கள்: சரத்குமார் ஆதங்கம்
‛தனித்து நிற்கிறீர்களா' என்று கேட்க மாட்டேன் என்கிறீர்கள்: சரத்குமார் ஆதங்கம்
ADDED : பிப் 23, 2024 01:19 AM

சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார்: பத்திரிகையாளர்கள் அனைவரும், அரசியல் ரீதியில் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக,'யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போகிறீர்கள்'என்றே கேட்கிறீர்கள். 'தனித்து நிற்கிறீர்களா' என கேட்க மாட்டேன் என்கிறீர்கள்.
டவுட் தனபாலு: உங்களதுஆதங்கத்தை பார்த்தால், தனித்து நின்று தன்மானம் காக்க முடிவு எடுத்துட்ட மாதிரி தெரியுதே... உங்களது இந்த முடிவு, தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிவுகளையே புரட்டி போடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: தேர்தல்அறிவித்த பிறகு தான், எங்கள் தலைமையில் கூட்டணி அமைவது குறித்து முடிவாகும். தி.மு.க., கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அந்த கூட்டணியில் இருந்து எந்தெந்த கட்சிகள் வெளியேறுகின்றன என பொறுத்திருந்து பாருங்கள்.
டவுட் தனபாலு: அறிவாலயத்துல நடக்க இருக்கும் சீட் பங்கீடு பேச்சுல, கோவிச்சிட்டு சில கட்சிகள் உங்க பக்கம் வரும்னு காத்துட்டு இருக்கீங்களா...? தப்பித் தவறி, சில கட்சிகள் வெளியில வந்தாலும்,பா.ஜ., பக்கம் போவாங்களே தவிர, உங்க பக்கம் எட்டியாவதுபார்ப்பாங்களா என்பது, 'டவுட்'தான்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: மரக்கிளையில் அமரும் பறவை, அதன் கிளை ஒடிந்து விடுமோ என்று அஞ்சுவதில்லை. அதன் நம்பிக்கை கிளையில் இல்லை; சிறகில் உள்ளது. அதுபோல் தான் எங்கள் கட்சி. எங்களுக்கு கூட்டணி இருக்கிறது என்ற நம்பிக்கையை விட, எங்கள்தொண்டர்கள் மீதுள்ள நம்பிக்கை தான் அதிகம்.
டவுட் தனபாலு: தொண்டர்கள் மீது அபார நம்பிக்கை இருந்தா, தேர்தல் தேதி அறிவிப்புக்காக ஏன் காத்திருக்கணும்...? உங்க தலைவி ஜெ., பாணியில, 39 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவிச்சிட்டு, இப்பவே பிரசாரத்துல களம் இறங்கினா, உங்க கட்சியின் துணிச்சலை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!