ADDED : பிப் 20, 2024 09:58 PM
மயிலாடுதுறை:வாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
மயிலாடுதுறை அருகே பாலையூர் போலீஸ் சரகம் சின்னகொக்கூர் ஆர்ச்சித் தெருவை சேர்ந்தவர் சரவணன்.22. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், செல்வக்குமார் என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி வீட்டில் இருந்த சரவணனிடம் மீண்டும் பிரச்சினை செய்த ராமச்சந்திரன், செந்தில்குமார், சிவக்குமார், ரஞ்சித் ஆகியோர் தாக்கியுள்ளனர். அப்போது ராமச்சந்திரன், செந்தில்குமார் இருவரும் தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் குத்தியதில் சரவணன் இறந்தார். இது குறித்து பாலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கலியன் மகன்கள் ராமச்சந்திரன்.31, செந்தில்குமார்.33, ஆடுதுறையை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் சிவக்குமார்.37, ரஞ்சித்.34. ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கு தொடர்பாக 19 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் ராமச்சந்திரன், செந்தில்குமார், சிவக்குமார், ரஞ்சித் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தலா ஆயிரத்து 500 அபராதம் கட்டதவறினால் மேலும் ஒரு மாதகால சிறை தண்டனை விதித்து நீதிபதி ராஜவேலு தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் ராமசேயோன் ஆஜரானார்.

