சிங்கப்பூர் போல இந்திய நகரங்கள்; உருவாக்க பிரதமர் மோடி விருப்பம்
சிங்கப்பூர் போல இந்திய நகரங்கள்; உருவாக்க பிரதமர் மோடி விருப்பம்
UPDATED : செப் 05, 2024 09:27 AM
ADDED : செப் 05, 2024 09:04 AM

சிங்கப்பூர்: அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி முன்னிலையில் செமிகண்டக்டர், டிஜிட்டல் தொழில்நுட்பம், கிளஸ்டர் மேம்பாடு, குறைக்கடத்தி வடிவமைப்பு உள்ளிட்ட துறை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பிரதமர் மோடி தனது பதவிக் காலத்தில் 5வது முறையாக சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் முன்னிலையில் செமிகண்டக்டர், டிஜிட்டல் தொழில்நுட்பம், கிளஸ்டர் மேம்பாடு, குறைக்கடத்தி வடிவமைப்பு உள்ளிட்ட 4 துறைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஒரு காலத்தில் அமெரிக்காவில் மட்டும் இருந்த செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்கள் இன்று உலகம் முழுவதும் உற்பத்தி மையத்தை அமைத்து வருகிறது.
வேகமாக வளரும்
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். சிங்கப்பூர் பிரதமர் உடனான உயர்மட்ட குழு பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம்.இதற்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படுகிறது. உலகில் வளரும் அனைத்து நாடுகளுக்கும் சிங்கப்பூர் உத்வேகம் அளிக்கிறது. சிங்கப்பூர் இன்னும் வேகமாக வளரும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.