ADDED : ஆக 15, 2024 04:34 AM

கொழும்பு : இலங்கையில், கடந்த 42 ஆண்டுகால அதிபர் தேர்தல் வரலாற்றில் அதிகபட்சமாக 38 வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நம் அண்டை நாடான இலங்கையில், அதிபர் தேர்தல் வரும் செப்., 21ம் தேதி நடக்கிறது. பொருளாதார நெருக்கடிக்குபின் நடக்க உள்ள முதல் அதிபர் தேர்தலான இதில், தற்போது அதிபராக உள்ள ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் போட்டியிடுகிறார்.
இதேபோல், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, நீதித்துறை அமைச்சராக உள்ள விஜயதாச ராஜபக்சே, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜே.வி.பி., தலைவர் அனுரா குமரா திசநாயகே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரும் அதிபர் தேர்தலில் களம் காணப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை செலுத்தும் அவகாசம் நேற்று மாலை நிறைவடைந்தது. அவர்களின் வேட்பு மனுக்களை ஏற்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
நேற்று வரை அதிபர் தேர்தலில் போட்டியிட, 38 பேர் டெபாசிட் தொகை செலுத்தி உள்ளனர். இதில், 20 பேர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், 18 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.
அனைவரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டால், இதுவரை நடந்த அதிபர் தேர்தலிலேயே, அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக இது அமையும்.
இலங்கையில் முதன்முதலாக 1982ல் நடந்த அதிபர் தேர்தலின் போது, ஆறு வேட்பாளர்கள் மட்டுமே களமிறங்கினர். கடந்த 2019ல் நடந்த அதிபர் தேர்தலில், அதிகபட்சமாக 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.