ADDED : ஏப் 28, 2024 12:50 PM
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தைச் சேர்ந்த 'ரிபப்ளிக் பர்ஸ்ட் பேங்க்' திவாலாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டில் திவாலான முதல் வங்கியாகியுள்ளது இவ்வங்கி. இதற்கு முன்பாக, கடந்தாண்டு நவம்பர் மாதம் 'சிட்டிசென்ஸ் பேங்க்' திவாலானது.
ரிபப்ளிக் வங்கி திவாலானதை அடுத்து நியூ ஜெர்சி, பென்சில்வேனியா மற்றும் நியூயார்க்கில் உள்ள இவ்வங்கியின் கிளைகள், 'புல்டன் பேங்க்'ன் கிளைகளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாகாணங்களில் வங்கிக்கு மொத்தம் 32 கிளைகள் உள்ளன.
வங்கியின் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் நோக்கில், அமெரிக்க அரசின் 'பெடரல் டிபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்', புல்டன் வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.
ரிபப்ளிக் பர்ஸ்ட் வங்கியின் அனைத்து டிபாசிட்கள் மற்றும் சொத்துக்களையும் புல்டன் வங்கி வாங்கிக்கொள்ள இருக்கிறது. ரிபப்ளிக் வங்கியின் வாடிக்கையாளர்கள், இனி புல்டன் வங்கியின் வாடிக்கையாளர்களாக கருதப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் எப்போதும் போல அவர்களின் டிபாசிட்களை கையாளலாம் என்றும், கடன் பெற்றுள்ளவர்கள் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து, அவர்களது பேமென்ட்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

