ஊழல் அறிக்கை கசிவு : மாலத்தீவு அதிபருக்கு சிக்கல்
ஊழல் அறிக்கை கசிவு : மாலத்தீவு அதிபருக்கு சிக்கல்
ADDED : ஏப் 17, 2024 11:06 PM

மால:மாலத்தீவில் பார்லிமென்ட் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் முகமது முய்சு 2018ல் ஊழல் செய்ததாக அறிக்கை கசிந்ததால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
நம் அண்டை நாடான மாலத்தீவின் அதிபராக முகமது முய்சு உள்ளார். அந்நாட்டின் மஜ்லிஸ் எனப்படும் பார்லிமென்டுக்கான தேர்தல் வரும் 21ல் நடக்கிறது.
இந்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 2018ல் ஊழலில் ஈடுபட்டதாக, நிதி புலனாய்வு அமைப்பு மற்றும் மாலத்தீவு காவல்துறை தயாரித்ததாக கூறப்படும் அறிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது.
அந்த அறிக்கையில், அதிபர் முய்சுவின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு நடந்த பணப் பரிமாற்றங்களில் முறைகேடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நிதி ஆதாரத்தை மறைக்க கார்ப்பரேட் நிறுவனங்களை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, அந்நாட்டு அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயக கட்சி மற்றும் மக்கள் தேசிய முன்னணி ஆகியவை, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதிபர் முய்சுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த குற்றச்சாட்டுகளை அதிபர் முகமது முய்சு மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியில் இருந்தன. நான் தவறு செய்திருந்தால் அப்போதே வெளிச்சத்திற்கு வந்திருக்கும். என் மீது எந்த தவறையும் அவர்களால் கூற முடியாது. முன்னர் மேயர் மற்றும் அதிபர் தேர்தலின் போதும் இதே குற்றச்சாட்டை கிளப்பினர். இதை எவ்வளவு காலத்திற்கு பேசினாலும், என் மீது பழி சுமத்த உங்களால் முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

