துப்பாக்கிச்சூடு: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் உயிர் தப்பினார்; மர்மநபரை சுட்டு கொன்ற போலீசார்
துப்பாக்கிச்சூடு: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் உயிர் தப்பினார்; மர்மநபரை சுட்டு கொன்ற போலீசார்
UPDATED : ஜூலை 15, 2024 01:50 PM
ADDED : ஜூலை 14, 2024 06:18 AM

பென்சில்வேனியா: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். காது பகுதியில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி நேற்று (ஜூலை 13) சனி இரவு அன்று பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் டிரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் காதுபகுதியில் காயம் அடைந்த டிரம்ப்பினை பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரினை போலீசார் சுட்டுக் கொன்றனர். போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் டிரம்ப் ஆதரவாளர் ஒருவர் பலியானார்.
அமெரிக்க அதிபர் பைடன் கண்டனம்
டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அதிபர் பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.‛ இது போன்ற சம்பவத்திற்கு அமெரிக்காவில் இனி இடம் இல்லை. இந்த சம்பவத்திற்கு எதிராக ஒரே தேசமாக நாம் ஒன்றிணைய வேண்டும்' இவ்வாறு அதிபர் பைடன் தெரிவித்தார்.
முன்னாள் அதிபர் ஒபாமா கண்டனம்
டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு அந்நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கண்டனம் தெரிவித்தார்.‛ நமது ஜனநாயகத்தில் இது போன்ற அரசியல் வன்முறைகளுக்கு இடமில்லை. காயம் அடைந்த டிரம்ப் விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்'. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு படையினருக்கு டிரம்ப் நன்றி
சம்பவத்தின் போது தனக்கு பாதுகாப்பு அளித்த பாதுகாப்பு படையினருக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். ‛ஏதோ தவறு நடக்க இருப்பதை உணர்ந்தேன். துப்பாக்கிக் குண்டு என் வலது காது பக்கத்தில் பட்டது. அதனால் ரத்தக்காயம் ஏற்பட்டது'. இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.