ஆயுதம் வழங்கிய வடகொரியாவுக்கு பரிசாக குதிரை, ஆடு, நாய், அளித்த ரஷ்யா
ஆயுதம் வழங்கிய வடகொரியாவுக்கு பரிசாக குதிரை, ஆடு, நாய், அளித்த ரஷ்யா
UPDATED : செப் 01, 2024 09:03 PM
ADDED : செப் 01, 2024 08:29 PM

உக்ரைன் உடன் போரிடுவதற்காக வடகொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அதற்கு பரிசாக ஆடு , நாய் குதிரை வழங்கப்ட்டு உள்ளதாக தென் கொரியா தெரிவித்து உள்ளது.
இது குறித்து தென் கொரியா தெரிவித்து இருப்பதாவது: ரஷ்யா உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு உதவிடும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவில் இருந்து ஓர்லோவ் டிராட்டர் வகையை சேர்ந்த 24 குதிரைகள் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
40 வயதான வடகொரியா அதிபர் கிம் ஜாங்-க்கு குதிரைகள் என்றால் கொள்ளை பிரியமாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்கனவே புடின் 30 குதிரைகளை அனுப்பி உள்ளார். இவை அனைத்தும் வடகொரியா அனுப்பிய ஆயுதத்திற்கான பணம் என தென் கொரியா தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் வடகொரியாவின் அரசு ஊடக நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்து இருப்பதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்ய அதிபர் புடின் வடகொரியாவுக்கு வந்திருந்தார். அப்போது இருநாடுகளுக்கிடையே கூட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் ரஷ்ய அதிபர் புடினுக்கு ஒரு ஜோடி நாய்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதிலாக ஆகஸ்ட் மாதத்தில் 447 ஆடுகளை புடின், கிம் ஜாங் உன்னுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
முன்னதாக உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவிற்கு பீரங்கி மற்றும் ஏவுகணைகளை வடகொரியா வழங்கி உள்ளதாக தென் கொரியா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா குற்றம் சாட்டின. இந்த குற்றச்சாட்டை வடகொரியாவும் ரஷ்யாவும் மறுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.