ADDED : ஆக 04, 2024 01:32 AM

டெல் அவிவ்: இஸ்ரேலை தாக்குவதற்கு ஈரான் தயாராகி வருவதை அடுத்து, மேற்கு ஆசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேலுக்கு உதவும் வகையில் போர்க்கப்பல்கள், விமானங்களை அமெரிக்க ராணுவம் அனுப்பியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையே கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கிய போர், ஒன்பது மாதங்களாக நீடித்து வருகிறது.
ஹமாஸ் ராணுவ தளபதியாக இருந்த முஹமது டெயிப், இஸ்ரேல் தாக்குதலில் கடந்த மாதம் கொல்லப்பட்டார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் சொகுசு விடுதியில் தங்கியிருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சமீபத்தில் கொல்லப்பட்டார்.
ஹனியே கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானிய உச்ச தலைவர் அலி கொமேனி அறிவித்தார். இதனால், மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரானுடன் இணைந்து ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேலைத் தாக்க காத்திருப்பதால் மேற்கு ஆசிய பகுதியில் முழுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, மேற்கு ஆசியாவில் உள்ள தனது ராணுவ கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளுக்கு கூடுதல் ஏவுகணை பாதுகாப்பு திறன் கொண்ட கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்களை அனுப்ப உத்தரவிட்டுஉள்ளதாக அந்நாட்டுராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துஉள்ளார்.
மேற்கு ஆசியாவை நோக்கி விமானப் படையின் ஒரு பிரிவும் சென்றுள்ளதாகவும், இஸ்ரேல் அருகே ஒரு விமானம் தாங்கி கப்பல் நிறுத்தப்படும் என்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துஉள்ளது.
எச்சரிக்கை
மேற்கு ஆசிய பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு, அங்குள்ள நம் நாட்டு துாதரகம் எச்சரித்துள்ளது.
அங்கு நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.