கல்பனா சாவ்லா மரணம் தந்த பாடம்: சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர நாசா நீண்ட யோசனை
கல்பனா சாவ்லா மரணம் தந்த பாடம்: சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர நாசா நீண்ட யோசனை
UPDATED : ஆக 31, 2024 12:41 PM
ADDED : ஆக 31, 2024 12:38 PM

வாஷிங்டன்: கடந்த 2003ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் போது விண்கலம் வெடித்து சிதறியதில் இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் காரணமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு கடந்த ஜூன் 5ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சென்றனர். 8 நாள் ஆய்வுப் பணிக்கு பிறகு அவர்கள் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 80 நாட்களுக்கும் மேலாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே உள்ளனர். ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டாலும், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இன்றி தனியாக வரும் 6 ம் தேதி பூமிக்கு திரும்ப உள்ளது. இந்த முடிவை பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு நாசா எடுத்துள்ளது.
இதற்கு முன்னதாக, 1986 ம் ஆண்டு ஜன.,28 ல் சாலஞ்சர் என்ற விண்கலம் வெடித்து சிதறியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த இரண்டு நிகழ்வுகள் குறித்து விசாரணை நடத்தும் குழுவில் இடம்பெற்றிருந்த பில் நெல்சன் தான் தற்போது நாசா அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த இரு நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு தான் விண்வெளி வீரர்களை 2025ம் ஆண்டு பூமிக்கு கொண்டு வருவது என நாசா முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பில் நெல்சன் கூறியதாவது: மேற்கண்ட இரண்டு விபத்துகள் தான், இரண்டு விண்வெளி வீரர்கள் இல்லாமல் ஸ்டார்லைனர் விண்கலத்தை பூமிக்கு கொண்டு வர வேண்டும் என முடிவை எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது. விண்வெளி செல்லும் விண்கலங்கள் பாதுகாப்புடன் உருவாக்கப்பட்டாலும் அவை ஆபத்தானவை. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ஜ் வில்மோரை சர்வதேச விண்வெளி மையத்தில் தங்க வைத்து விட்டு, விண்கலத்தை மட்டும் பூமிக்கு கொண்டு வருவது என ஒரு மனதாக எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.