இந்தியா - அமெரிக்கா ராணுவ ஒத்துழைப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின
இந்தியா - அமெரிக்கா ராணுவ ஒத்துழைப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின
ADDED : ஆக 24, 2024 02:22 AM

வாஷிங்டன் :ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவத் துறையில் இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாயின.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நான்கு நாள் பயணமாக அமெரிக்காவுக்கு நேற்று சென்றடைந்தார்.
தொடர்பு அதிகாரிகள்
இந்த பயணத்தின்போது, ராணுவத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், இரு நாட்டு ராணுவ உறவை மேலும் விரிவாக்கும் வகையில் இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாயின. எஸ்.ஓ.எஸ்.ஏ., எனப்படும் ராணுவ வினியோக உறுதி ஏற்பாடுகள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத் தவிர, இரு நாடுகளுக்கும் இடையே தொடர்பு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
அமெரிக்க அரசின் சார்பில் அந்த நாட்டின் ராணுவ தொழில் கொள்கைப் பிரிவின் முதன்மை துணை உதவிச் செயலர் டாக்டர் விக் ரம்தாஸ், இந்தியா சார்பில், ராணுவத்தின் கொள்முதல் பிரிவின் டைரக்டர் ஜெனரலும், கூடுதல் செயலருமான சமீர் குமார் சின்ஹா கையெழுத்திட்டனர்.
வினியோக தொடர்
இந்த ஒப்பந்தத்தின்படி, தங்களுடைய நாட்டின் ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களுக்கான பொருட்கள் மற்றும் சேவைகளை, மற்ற நாட்டின் தொழில் துறைகளிடம் இருந்து இரு நாடுகளும் பரஸ்பரம் பெற்றுக் கொள்ள முடியும்.
அதாவது, வினியோக தொடரில் தடை இல்லாத வகையில், நேரடியாக தொழில் துறைகளிடம் இருந்து தங்களுக்கு தேவையான பொருட்களை இரு நாடுகளும் வாங்கிக் கொள்ள முடியும்.
இது நாட்டின் பாதுகாப்புக்கு வலு சேர்ப்பதுடன், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும். அமெரிக்கா இதுவரை, இத்தாலி, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர் உட்பட 17 நாடுகளுடன் இந்த ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது, 18வது நாடாக இந்தியா இணைந்துள்ளது.