தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரைனுக்கு தப்ப முயன்றதாக புடின் குற்றச்சாட்டு
தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரைனுக்கு தப்ப முயன்றதாக புடின் குற்றச்சாட்டு
ADDED : மார் 25, 2024 04:56 AM

மாஸ்கோ : ''ரஷ்யாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உக்ரைனுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டனர்,'' என, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் குற்றம் சாட்டி உள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே, 'குரோகஸ் சிட்டி ஹால்' என்ற பிரபல இசை அரங்கில், கடந்த 22ம் தேதி இரவு, மர்ம நபர்கள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
எச்சரிக்கை
இதில், 130 பேர் உயிரிழந்தனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்., கோரசன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தும், ரஷ்ய அதிகாரிகள் அலட்சியமாக இருந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ரஷ்யா முழுதும் நேற்று, அந்நாட்டு அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று, இந்த தாக்குதல் தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியதாவது:
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. இது தொடர்பாக, சந்தேகத்துக்குரிய நான்கு பேரை ரஷ்ய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
எல்லை வழியாக உக்ரைனுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். நாடு முழுதும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேல், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதிபர் விளாடிமிர் புடின் இவ்வாறு குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அத்துமீறல்
இதற்கு பதிலடி கொடுத்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், ''மாஸ்கோவில் நடந்த தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற முடியாதவர்கள், எங்கள் மீது வீண்பழி சுமத்துகின்றனர். எங்கள் மீது ரஷ்யா தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது,'' என்றார்.
இதற்கிடையே, இசை அரங்கின் கட்டட இடிபாடுகளுக்குள் தங்களது உறவினர்கள் சிக்கி இருக்கின்றனரா என்பதை அறிய அந்த அரங்கம் முன், ஏராளமானோர் கூடியிருந்தனர்.

