மீண்டது பொருளாதாரம்;வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க இலங்கை அரசு முடிவு
மீண்டது பொருளாதாரம்;வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க இலங்கை அரசு முடிவு
ADDED : செப் 14, 2024 10:29 PM

கொழும்பு: பொருளாதாரத்தில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்து வாகனங்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச செலாவணி நிதியத்தின் (IMF) திட்டப்படி அக்டோபர் 1 முதல் மூன்று கட்டங்களாக தடை நீக்கப்படும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது இலங்கை அரசு அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.கோவிட் தொடங்கியது முதல் நான்கு ஆண்டுகளாக இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்து வந்தன.
இந்த நிலையில் தற்போது பொருளாதாரம் சற்று மீண்டு வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இலங்கை ரூபாயின் மதிப்பும் உயர்ந்து வருகிறது. இதையடுத்து மோட்டார் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மோட்டார் வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், பொருளாதார செயல்பாடுகள் மேலும் அதிகரிக்கும். அதன் மூலம் அரசின் வரி வருவாய் அதிகரிக்கும் என்றும் அரசு கணக்கிட்டுள்ளது.

