ADDED : பிப் 25, 2025 01:00 AM

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போர் துவங்கி மூன்றாண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, தங்கள் ஆதரவை தெரிவிக்கும் விதமாக உலக தலைவர்கள் உக்ரைனில் குவிந்தனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையே, 2014 முதல் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், 2022 பிப்., 24ல் உக்ரைன் மீது வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை ரஷ்யா துவங்கியது.
இதையடுத்து துவங்கிய போர் மூன்றாண்டுகளாக நீடித்து வருகிறது. மூன்றாம் ஆண்டு நிறைவடைந்த நாளான நேற்று, பல்வேறு உலக தலைவர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்வில் குவிந்தனர்.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா, வட ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஸ்பெயின் பிரதமர்கள் உள்ளிட்டோர், உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக கீவ் நகருக்கு வந்தனர்.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'இந்த போரில், உக்ரைனின் தலைவிதி மட்டுமல்ல; ஐரோப்பாவின் தலைவிதியும் ஆபத்தில் உள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், தங்கள் முயற்சிகளை மறு ஆய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில், 27 ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பங்கேற்கும் அவசர மாநாட்டை, மார்ச் 6ல் நடத்த உள்ளதாக ஐரோப்பிய கவுன்சில் தெரிவித்துள்ளது.