முதன்முறையாக அமெரிக்க - பிரிட்டன் உளவு தலைவர்கள் சந்திப்பு
முதன்முறையாக அமெரிக்க - பிரிட்டன் உளவு தலைவர்கள் சந்திப்பு
UPDATED : செப் 08, 2024 12:34 AM
ADDED : செப் 07, 2024 09:21 PM

லண்டன்: ரஷ்யா -உக்ரைன், இஸ்ரேல் -காசா ஆகிய இரு போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக அமெரிக்க- பிரிட்டன் உளவுத்துறை தலைவர்கள் முதன்முறையாக செய்தியாளர்கள் முன் நேரில் தோன்றினர்.
ரஷ்யா- - உக்ரைன் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டியும் தொடர்கிறது. அதே போன்று இஸ்ரேல்- ஹமாஸ் இடையே காசா பகுதியில் கடந்தாண்டு அக். 07-ம் தேதி முதல் போர் துவங்கி ஓராண்டை நெருங்கி வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா தலைமையில் மேலை நாடுகள் ஆயுதங்களும், நிதியும் அளித்து வருகின்றன. ரஷ்யாவுக்கு எதிராக அவை பொருளாதார தடைகளையும் விதித்துஉள்ளன. இஸ்ரேல் - காசா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவும் முயற்சித்து வருகிறது.
எந்த பிரச்னைக்கும் போர்க்களத்தில் தீர்வு காண முடியாது,பேச்சுவார்த்தை தீர்வாகும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். சமீபத்தில் ரஷ்யா , உக்ரைன் சென்று போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.
இதன் பலனாக கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை தயார் என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்ததுடன், மோடியின் முயற்சியால் சாத்தியம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமெரிக்காவின் முக்கிய உளவு அமைப்பான சி.ஐ.ஏ. அமைப்பின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ், பிரிட்டனின் எம்.16 என்ற உளவு அமைப்பின் தலைவர் ரிச்சர்ட்மூர் ஆகிய இருவரும் பிரிட்டன் தலைநகர் லண்டனில் , பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இவரும் ஒன்றாக பங்கேற்றனர். இதன் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவியுள்ளது.
இதன் மூலம் இரு நாட்டு உளவு துறை தலைவர்களும் பொது வெளியில் நேரில் தோன்றியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் பின்னணியில் இரு உளவு தலைவர்களும் இரு போர்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இரு போரை நடத்தி வரும் இரு தரப்பினரையும் சமரசப்படுத்வதற்கான ஒரு செயல்திட்டத்தைக் கொண்டுவருவது, அது குறித்து விரிவான அறிக்கையை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.