ADDED : பிப் 27, 2025 02:17 AM

கீவ்: உக்ரைனில் உள்ள அரிய வகை கனிமங்களை வெட்டி எடுக்கும் குத்தகைக்கான ஒப்பந்தத்தில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட வெள்ளை மாளிகைக்கு நாளை வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா தொடர்ந்த போர் மூன்று ஆண்டுகளை கடந்துள்ளது. இந்தப் போரின்போது, முந்தைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு, உக்ரைனுக்கு ஆதரவாக இருந்தது; உக்ரைனுக்கு ராணுவ உதவிகளுடன், நிதியுதவியையும் அளித்து வந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் நிர்வாகம், அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. ரஷ்யாவுடன் நெருக்கத்தை காட்டி வருகிறது. உக்ரைனுக்கான உதவிகளை நிறுத்தியுள்ளது.
இதற்கிடையே, உக்ரைனில் அரிய வகை கனிம வளங்கள் ஏராளமாக உள்ளன. உலகின் மொத்த அரிய வகை கனிமங்களில், 5 சதவீதம் அந்த நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, லித்தியம், கிராபைட் உள்ளிட்ட கனிம வளங்கள் அபரிமிதமாக உள்ளன. ராணுவம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றின் தயாரிப்புக்கு இந்த கனிமங்கள் தேவை.
கனிம வளங்களை வெட்டி எடுக்கும் குத்தகை தொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பேசி வந்தது. ஆனால், அமெரிக்கா பல கடுமையான நிபந்தனைகளை விதித்தது.
குறிப்பாக, அரிய வகை கனிமங்கள் வர்த்தகத்தில், 50 சதவீத லாபத்தை அளிக்க வேண்டும் என்று டிரம்ப் நிபந்தனை விதித்தார். அதே நேரத்தில் உக்ரைனுக்கு ராணுவ உதவி தொடர வேண்டும் என்ற கோரிக்கையை அவர் ஏற்கவில்லை.
இவ்வாறு பல விஷயங்களில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில், கனிமங்களை வெட்டி எடுக்கும் குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜெலன்ஸ்கி, வெள்ளை மாளிகைக்கு நாளை வருகை தர இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்துள்ளார்.
இதை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் உறுதி செய்துள்ளார்.