ADDED : ஜன 03, 2025 12:16 AM

பொட்கொரிகா:தென் கிழக்கு ஐரோப்பிய நாடான மான்டினெக்ரோவின் செட்டின்ஜி நகரில் விடிக் என்பவர் மதுபான விடுதி நடத்தி வந்தார். அலெக்சாண்டர் மாட்ரினோவிக், 45, என்பவர், அந்த விடுதிக்கு வந்து நாள் முழுதும் அங்கே இருந்துள்ளார். அப்போது அவருக்கும், அந்த விடுதியில் இருந்த சிலருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
உடனே வீட்டுக்குச் சென்று துப்பாக்கியுடன் வந்த அலெக்சாண்டர், மதுபான விடுதியின் உள்ளே துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதில், அந்த விடுதியின் உரிமையாளர் விடிக் மற்றும் அவரது குழந்தைகள் இருவர் என, நான்கு பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து வெளியேறி மேலும் இரண்டு இடங்களில் கண்ணில் பட்டவர்களை அவர் சுட்டார். இதில், ஆறு பேர் கொல்லப்பட்டனர்; நான்கு பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் அலெக்சாண்டரை சுற்றி வளைத்தனர். அப்போது தன்னை தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த மான்டினெக்ரோ அதிபர் ஜாகோவ் மிலாடோவிக், நாட்டில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்தார்.

