இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் குழந்தைகள் உட்பட 17 பேர் பலி
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் குழந்தைகள் உட்பட 17 பேர் பலி
ADDED : ஆக 18, 2024 07:10 AM

ஜெருசலேம்: காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, 2023 அக்., 7 முதல் மோதல் நடக்கிறது. காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட, 30,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனியர்கள்
இந்நிலையில், இன்று(ஆகஸ்ட் 18) காசா பகுதியில் உள்ள ஜவேடா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில், குழந்தைகள் உட்பட 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சில தினங்களுக்கு, இப்பகுதியில் வசித்து வந்த மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
ஒரே குடும்பத்தினர்!
காசா சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது: கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எட்டு குழந்தைகள், நான்கு பெண்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் தங்கள் படுக்கைகளில் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென குண்டு வீச்சு தாக்குதல் நடந்ததால், பரிதாபமாக உயிரிழந்தனர் என்றார்.
விளக்கம்
ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது என இஸ்ரேலிய ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

