போர் குறித்த தவறான பதிவுகள் யு.ஏ.இ.,யில் 19 இந்தியர் கைது
போர் குறித்த தவறான பதிவுகள் யு.ஏ.இ.,யில் 19 இந்தியர் கைது
ADDED : மார் 17, 2026 02:14 AM
துபாய்: ஈரானில் போர் நடந்து வரும் வேளையில், தவறான பதிவுகள் வெளியிட்ட 19 இந்தியர் உட்பட 35 பேரை கைது செய்ய, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உத்தரவிட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது, கடந்த மாதம் 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதலை துவக்கின. இதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் போர் குறித்து தவறான மற்றும் கற்பனையான உள்ளடக்கங்களைக் கொண்ட வீடியோக்களை பதிவிட்ட குற்றத்துக்காக, 19 இந்தியர் உட்பட 35 பேரை கைது செய்யவும், விரைவான விசாரணைக்கு உட்படுத்தவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் அட்டர்னி ஜெனரல் டாக்டர் ஹமத் சைப் அல் ஷம்சியின் டிஜிட்டல் கண்காணிப்பின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு அல்லது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், வதந்திகளை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும் சட்டங்களை எமிரேட்ஸ் கொண்டுள்ளது. இச்சட்டத்தின்படி, குறைந்தது ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 22.6 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
ராணுவ நகர்வுகள், முக்கிய இடங்கள் அல்லது தாக்குதலுக்கு பிந்தைய காட்சிகளை படம் பிடிக்க வேண்டாம் என, எமிரேட்ஸ் உள்துறை அமைச்சகம் ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுத்தது.
இருப்பினும், போலி செய்திகளை வெளியிட்டதுடன், தேசிய ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

