எவரெஸ்ட் உச்சியை அடைந்து திரும்புகையில் 2 இந்தியர் பலி
எவரெஸ்ட் உச்சியை அடைந்து திரும்புகையில் 2 இந்தியர் பலி
ADDED : மே 23, 2026 05:18 AM
காத்மாண்டு: உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து திரும்பும் வழியில், இரு இந்திய மலையேற்ற வீரர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான நேபாளம் -- திபெத் எல்லையில் இமயமலையில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 29,032 அடி உயரத்தில் உள்ள இந்த சிகரம் உலகிலேயே உயரமானது.
ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தை அடைகின்றனர்.
இந்த சிகரத்தில் ஏற ஏப்., - மே மாதங்கள் சீசனாக கருதப்படுகின்றன. இந்த சீசனில் மலையேற, 502 பேருக்கு நேபாளம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 20ல், ஒரே நாளில் மட்டும், 274 பேர் எவரெஸ்ட் உச்சியை அடைந்தனர்.
அதில், நம் நாட்டைச் சேர்ந்த சந்தீப் அரே, அருண் குமார் திவாரியும் அடங்குவர். இருவரும் நடுத்தர வயதை சேர்ந்தவர்கள். கடந்த 20ல், சந்தீப் அரேவும், மறுநாள் அருண் குமார் திவாரியும் எவரெஸ்ட் உச்சியை அடைந்தனர். பின், வழிகாட்டிகள் உதவியுடன் கீழே இறங்கிய போது இருவருக்கும் சோர்வு ஏற்பட்டது.
முதலுதவி அளித்தும் சிகிச்சை பலனின்றி இருவரும் மலையிலேயே உயிரிழந்தனர். இதன் மூலம் இந்த சீசனில் எவரெஸ்ட் சிகரத்தில் பலியானோரின் எண்ணிக்கை, 5 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன் மூன்று நேபாள வீரர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர்.
