ADDED : மார் 08, 2026 06:16 AM
நைரோபி: கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, 23 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியில், நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. இதில், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், ஏராளமான வாகனங்கள் சிக்கிக்கொண்டன.
இதனால், மக்கள் கார்களிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது. பல குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், 23 பேர் பலியாகினர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட, 29 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் ராணுவம் அவசரமாக களமிறக்கப்பட்டுள்ளது. கென்யா ரெட் கிராஸ் அமைப்பினருடன் இணைந்து அவர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

