அந்த இடத்தில் 26 வருஷம்; அடைத்திருந்த பிளாஸ்டிக்: அமெரிக்க வாலிபருக்கு அதிர்ச்சி
அந்த இடத்தில் 26 வருஷம்; அடைத்திருந்த பிளாஸ்டிக்: அமெரிக்க வாலிபருக்கு அதிர்ச்சி
UPDATED : செப் 15, 2024 10:00 AM
ADDED : செப் 15, 2024 09:48 AM

வாஷிங்டன்: அமெரிக்க வாலிபர் ஒருவர், 6 வயது சிறுவனாக இருந்தபோது, மூக்கில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டு, 26 ஆண்டுக்கு பிறகு தானாக வெளியேறியது. இப்போது தான் சுதந்திரமாக சுவாசிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்தவர் ஆன்டி நார்டன், 32. இவர் ஆறு வயதான நிலையில் விளையாட்டின் போது பிளாஸ்டிக் வளையம் ஒன்று மூக்கில் சிக்கிக் கொண்டது. அவரது தாயார் கடும் முயற்சி செய்து, அதனை அகற்றினார். இருப்பினும் ஒரு சிறு பகுதி மட்டும் உள்ளேயே சிக்கி இருந்துள்ளது. சிறுவனுக்கும் தெரியவில்லை; அவரது தாயாருக்கும் தெரியவில்லை.அப்போது முதல் ஆன்டி நார்டன் சுவாசிப்பதில் சில பிரச்னைகளை சந்தித்து வந்தார். இதற்காக டாக்டர்களை சந்தித்த போது, மூக்கு வழியாக வேகமாக காற்றை வெளியேற்றும்படி கூறினர். அடிக்கடி செய்யவும் அறிவுறுத்தி வந்தனர்.
இதன்படி, ஆன்டி நார்டனும் செய்து வந்த நிலையில், சமீபத்தில் அந்த பிளாஸ்டிக் துண்டு வெளியே வந்தது. இதை பார்த்த அவருக்கு அதிர்ச்சியும், ஆச்சர்யமும் ஏற்பட்டது. இது குறித்து தன் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், '' 26 ஆண்டுக்கு பின் இப்போதுதான் என்னால் நிம்மதியாக சுவாசிக்க முடிகிறது. வாசனையை நுகர முடிகிறது'' என மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.