இரு மடங்கு கடன் வசூல்: விஜய் மல்லையா புலம்பல்: கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!
இரு மடங்கு கடன் வசூல்: விஜய் மல்லையா புலம்பல்: கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!
UPDATED : டிச 19, 2024 10:50 PM
ADDED : டிச 19, 2024 10:23 PM

புதுடில்லி: நான் வாங்கிய கடனை விட இரு மடங்கு கடனை வசூலித்ததாக தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
லோக்சபாவில் நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: மிகப் பெரிய அளவிலான பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டோரிடம் இருந்து சொத்துகளை பறிமுதல் செய்து, அவற்றை பணமாக்கி உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியை அமலாக்கத்துறை சிறப்பாக செயலாற்றி வருகிறது. அதன்படி, தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை விற்று, அவற்றில் கிடைத்த 14,131 கோடி ரூபாய், பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனக்கூறியிருந்தார்
உரிமை
இது தொடர்பாக விஜய் மல்லையா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வட்டியுடன் சேர்த்துமொத்த கடன் ரூ.6,203 கோடி என கடன் மீட்பு தீர்ப்பாயம் தெரிவித்து உள்ளது. அந்த வகையில் அமலாக்கத்துறை மூலம் வங்கிகள் என்னிடம் ரூ.14,131.60 கோடியை வசூலித்துள்ளது. என்னிடம் இருந்து அமலாக்கத்துறை மற்றும் வங்கிகள் இரண்டு மடங்கு கடனை எப்படி எடுத்தார்கள் என்பதை சட்டப்பூர்வமாக நியாயப்படுத்த முடியாவிட்டால் அது தொடர்பாக நிவாரணம் கோர எனக்கு உரிமை உண்டு.
கடன் தொகையைத் தாண்டி என்னிடம் இருந்து ரூ.8 ஆயிரம் கோடி கூடுதலாக வசூலிக்கப்பட்டு உள்ளது. யாராவது முன்வந்து இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவார்களா? இழிவுபடுத்தப்பட்ட என்னை ஆதரிக்க தைரியம் தேவை எனக்கூறி உள்ளார்.
பதில்
அவரது பதிவுக்கு பதில் அளித்து நெட்டிசன்கள் அடுத்தடுத்து பல கருத்துகளை பகிர துவங்கினர். அதில் பெரும்பாலானோர், இந்தியாவை விட்டு வெளியேறியது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர். இந்தியா வர வேண்டும். சட்ட ரீதியில் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளனர்.இன்று வங்கி விடுமுறையா என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். ஒரு சிலர் வங்கி வேலை நாட்களிலும், மல்லையா டுவீட் போடுவதாக கிண்டல் செய்துள்ளனர்.நெட்டிசன்களின் சில கருத்துகள்*இந்தியர்கள் கடுமையாக உழைத்த பணத்திற்கு யார் வட்டி கட்டுவார்கள்
*இங்கு பதிவு செய்வதைவிட்டுவிட்டு இந்தியா திரும்புங்கள்.
*ஸ்டேட் வங்கி ஏன் இப்படி செய்கிறீர்கள்? நீங்கள் ஏன் அவருக்கு பண்டிகை வாழ்த்துகளை தெரிவிக்கவில்லை. இது வங்கி மற்றும் கடனாளி உறவை மீறும் அப்பட்டமான துஷ்பிரயோகம் ஆகும்
*அடுத்த முறை இந்தியாவி்ல இருந்து போராடுங்கள்
* உச்சநீதிமன்றத்தை ஏன் நாடக்கூடாது
*அனில் அம்பானியை ஏன் யாரும் கேட்கவில்லை.
*நீங்கள் பிரிட்டனில் ஒரு மாளிகையில் அமர்ந்து கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள். நீங்கள் தவறாக பயன்படுத்திய பணத்திற்காக மற்றவர்கள் தைரியத்தை காட்ட வேண்டும் என சொல்கிறீர்கள்.
*உங்களுக்காக எனது குரலை உயர்த்துவேன்
*ஐ.பி.எல்.,ல் பெங்களூரு அணி வெற்றி பெற்றால், மட்டுமே அவர் நாடு திரும்புவார்.
*உங்களையும், உங்களது கிங்பிஷர் காலண்டரையும் மிஸ் செய்கிறோம்.
*கிங்பிஷர் விமான ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் இருந்த போது, நீங்கள் ரூ.90 கோடியில் பிறந்த நாள் கொண்டாடினீர்கள்.
*நீங்கள் ரூ.1 கோடி கொடுத்தால், உங்களுக்கு ஆதரவாக நிற்கிறேன்
*எந்தக் கடையிலும் இப்போது கிங்பிஷர் பீர் கூலிங் கிடைப்பதில்லை.
*வங்கி விடுமுறை என்பதால், டுவீட் போட்டீர்களா
*அதானி, அனில் அம்பானி கடன் தள்ளுபடி செய்யப்படும்போது, மல்லையா இரு மடங்காக கடன் செலுத்துகிறார்.
*நீங்களாக செலுத்தியிருந்தால் 6,200 கோடி மட்டும்தான்; நாங்க கஷ்டப்பட்டு வசூலித்ததால் 14,000 கோடி.
*பாக்கி 8000 கோடி வட்டிக்கு சரியா போச்சு.
இப்படி பலவிதமான கமென்ட்களை நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.