உக்ரைனுக்கு 425 மில்லியன் டாலர் மதிப்பில் ஆயுத உதவி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
உக்ரைனுக்கு 425 மில்லியன் டாலர் மதிப்பில் ஆயுத உதவி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
ADDED : அக் 17, 2024 07:12 AM

வாஷிங்டன்: ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் உக்ரைனுக்கு 425 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ளது. ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தாலும், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. ரஷ்யாவுக்கு எதிராக போரிடும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் அதிபர் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகியுள்ளார். இந்த நிலையில், உக்ரைனுக்கு 425 மில்லியல் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். போர் விமானங்கள், டாங்கிகள் மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது பதவி காலத்தில் கடைசியாக, போர் நிலவரம் குறித்து உக்ரைனுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யவும் அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஏற்கனவே உக்ரைன் வெற்றி பெறும் வரை அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அதிபர் பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும் வழங்குவார்கள் என வெள்ளை மாளிகை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, உக்ரைனுக்கு 425 மில்லியன் டாலர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் அமெரிக்காவுக்கு, அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்.