UPDATED : ஜூன் 07, 2025 08:30 AM
ADDED : ஜூன் 07, 2025 05:19 AM

ஜெருசலேம்: பாலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 2023 அக்டோபரில் இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,200 அப்பாவி பொது மக்களை சுட்டுக்கொன்றனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் துவங்கியது. கடந்த 20 மாதங்களாக காசாவில் தாக்குதல் நடந்து வருகிறது.
இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கான உணவு, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. சர்வதேச நாடுகள் மனிதாபிமான உதவிகள் வழங்க முன் வந்த நிலையில் அதற்கு இஸ்ரேல் தடை விதித்தது. கடந்த இரு வாரங்களாக மட்டுமே அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காசாவைச் சேர்ந்த முகமது ஜாவத் தன் குழந்தைக்கு பிடித்தமான பார்லே -- ஜி பிஸ்கட்டை வாங்கி தந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதன் விலை தற்போது 2,400 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், இருப்பினும் குழந்தையின் ஆசைக்காக வாங்கி தந்தாக அதில் கூறியுள்ளார். இதை பார்த்து பலர் தங்கள் ஆச்சர்யத்தையும், கவலையையும் வெளிப்படுத்தினர்.