ADDED : ஜூலை 31, 2025 03:02 AM
பவுல்சா: மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினோ பாசோவில், ராணுவத் தளத்தின் மீது ஆயுதமேந்திய குழு நடத்திய தாக்குதலில், 50 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஐரோப்பிய நாடான பிரான்சின் காலனியாதிக்கத்தில் இருந்து 1960-ல் விடுதலை பெற்ற புர்கினோ பாசோ, 2.3 கோடி மக்கள் தொகையை கொண்டது. இது, அடிக்கடி முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது.
நாட்டின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள், சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. அதிலும், மேற்கு ஆப்ரிக்கா முழுதும் தாக்குதல்களை நடத்தும் பல ஆயுதக் குழுக்களில் ஒன்றான, ஜமாத் நஸ்ர் அல் -இஸ்லாம் வால்- என்ற முஸ்லிம் குழு அவ்வப்போது புர்கினோ பாசோ மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பவுல்சா மாகாணத்தின் டார்கோவில் உள்ள ராணுவத் தளத்தின் மீது ஆயுதமேந்திய குழு தாக்குதல் நடத்தியது. இதில் 50 வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் பங்கேற்றதாகவும், வீரர்களை கொன்ற பிறகு ராணுவ தளத்தை எரித்து சூறையாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

