அரசுக்கு எதிரான போராட்டத்தில் 5,002 பேர் பலி? ஈரானை நோக்கி விரையும் அமெரிக்க கப்பல்கள்
அரசுக்கு எதிரான போராட்டத்தில் 5,002 பேர் பலி? ஈரானை நோக்கி விரையும் அமெரிக்க கப்பல்கள்
ADDED : ஜன 23, 2026 10:56 PM

டெஹ்ரான் : ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 5,002 ஆக அதிகரித்துள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்ட மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. நிலைமை மோசமடைந்து வருவதை அடுத்து, அந்நாட்டை நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் படையெடுத்துள்ளன.
மேற்காசிய நாடான ஈரானில், டாலருக்கு எதிரான அந்நாட்டின் கரன்சி மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு அரசுக்கு எதிராக, கடந்த டிச., 28 முதல் டெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, கடந்த 8ல், இணைய மற்றும் தொலை தொடர்பு சேவையை ஈரான் அரசு முடக்கியது. எனினும் போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில், 43 குழந்தைகள் உட்பட 5,002 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட, எச்.ஆர்.ஏ.என்.ஏ., என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. போராட்டங்களில் ஈடுபட்ட 26,800க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது-.
இதற்கிடையே, ஈரான் அரசு முதன்முறையாக போராட்டத்தின் போது இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 3,117 பேர் பலியாகியுள்ளதாக தெரிவித்து உள்ளது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் பயங்கரவாதிகள் என்றும் அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது.
மேலும், கைதான 800 போராட்டக்காரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்தையும் ஈரான் அரசு மறுத்துள்ளது. அதே சமயம், மரண தண்டனை தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஈரானில் நிலைமை மோசமடைந்து வருவதால் நடவடிக்கை எடுக்க ஏதுவாக, அமெரிக்க போர்க்கப்பல்கள் அந்நாட்டை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிரம்ப் கூறுகையில், ''ஈரானில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகளை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எதற்கும் தயாரான நிலையில் இருக்கவே போர்க்கப்பல்கள் அங்கு நிலைநிறுத்தப்படுகின்றன. அணுசக்தி திட்டத்தை துவங்கினாலோ அல்லது கைதானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றினாலோ ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும்,'' என, எச்சரித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஈரான் தளபதிகள், தங்கள் விரல்கள் துப்பாக்கி விசையின் மீது இருப்பதாகவும், எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல போர்க்கப்பல்கள் தற்போது தென் சீன கடல் பகுதியில் இருந்து இந்திய பெருங்கடல் வழியாக மேற்காசியா நோக்கி பயணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மட்டுமின்றி, பிராந்திய பதற்றத்தை கருதி, பிரிட்டனின் டைபூன் போர் விமான படைகளும் ஈரானை சுற்றியுள்ள கடல் மற்றும் வான்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2025 ஜூனில், ஈரானில், அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலே அந்நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.

