தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி
ADDED : டிச 27, 2025 10:16 PM

தைபே: தைவானில் ரிக்டரில் 7 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கின. இதனால், பொதுமக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
தைவானின் மத்திய வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, கிழக்கு ஆசிய நாடான தைவானின் இலன் நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 73 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகர் தைபேவில் அதிக பட்ச நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால், உயரமான கட்டடங்கள் வேகமாக குலுங்கின. பீதியில் பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இதுவரை பெரிய அளவிலான சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், கடலோர பகுதிகளுக்கு சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளதா? என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு, தைவானின் கடலோர மாவட்டமான தைதுங்கில் ரிக்டர் அளவுகோலில், 6.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

