அமெரிக்காவில் ரூ.8300 கோடி மோசடி; இந்திய தொழிலதிபருக்கு சிறை தண்டனை
அமெரிக்காவில் ரூ.8300 கோடி மோசடி; இந்திய தொழிலதிபருக்கு சிறை தண்டனை
ADDED : ஜூலை 03, 2024 07:21 AM

சிகாகோ: அமெரிக்காவில் போலி ஆவணங்களை அளித்து, முதலீட்டாளர்களை ஏமாற்றி, 8,300 கோடி ரூபாய் மோசடி செய்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் ரிஷி ஷாவுக்கு, 38, ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோவில் வசிப்பவர் ரிஷி ஷா. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், 2006ம் ஆண்டு 'அவுட்கம் ஹெல்த்' என்ற நிறுவனத்தை துவக்கினார். இந்நிறுவனம் புதுமையான முறையில் விளம்பரம் செய்வதன் வாயிலாக நோயாளிகள் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி மருந்து நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்க முடியும் என்று கூறியது.
இதற்காக 'அவுட்கம் ஹெல்த்' நிறுவனம், மருத்துவமனைகள் மற்றும் டாக்டர்களின் அறையில் மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை விளம்பரங்களாக ஒளிபரப்பி வந்தது.
இதையடுத்து பிரபலமான பல மருத்துவ நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு பணம் தந்தனர். நிறுவனத்தின் வளர்ச்சியை கண்டு முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் அவுட்கம் ஹெல்த்தில் முதலீடு செய்தன.
இந்நிலையில், கடந்த 2017ல் அவுட்கம் ஹெல்த் நிறுவனம் போலி ஆவணங்களை தயாரித்து, 8,300 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்துள்ளதை 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தித்தாள் அம்பலப்படுத்தியது.
இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களான கோல்டுமேன் சாக்ஸ், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் உள்ளிட்டவையும் பணத்தை இழந்துள்ளன.
இதையடுத்து, அந்நிறுவனத்தின் நிறுவனர் ரிஷி ஷா, இணை நிறுவனர்களான பிராட் பர்டி, ஷர்த்தா அகர்வால் ஆகியோர் மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கின் சாட்சியங்களை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், அவர்களின் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியது.
இதையடுத்து, ரிஷி ஷாவுக்கு ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதேபோல், இணை நிறுவனர்களான பிராட் பர்டிக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்களும், ஷர்த்தா அகர்வாலுக்கு மூன்று ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.