இலங்கை அருகே ஈரான் போர் கப்பலை தாக்கி அழித்தது அமெரிக்க கடற்படை: 80 பேர் பலி; 50க்கும் மேற்பட்டோர் மாயம்
இலங்கை அருகே ஈரான் போர் கப்பலை தாக்கி அழித்தது அமெரிக்க கடற்படை: 80 பேர் பலி; 50க்கும் மேற்பட்டோர் மாயம்
UPDATED : மார் 04, 2026 10:49 PM
ADDED : மார் 04, 2026 03:47 PM

காலி : இலங்கையின் காலி துறைமுகம் அருகே இந்தியப் பெருங்கடலில் பயணித்த ஈரானின் 'ஐரிஸ் டீனா' என்ற போர்க் கப்பலை, 'டார்பிடோ' எனப்படும் நீரில் செல்லும் ஏவுகணை வைத்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது. இதில், 80 பேர் பலியாகினர்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், பிப்., 18 முதல் 25 வரை இந்தியா அருகே வங்கக் கடலில் ஈரானின் 'ஐரிஸ் டீனா' போர்க் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.அந்தப் பயிற்சியில் பல நாடுகளின் கடற்படைகள் கலந்து கொண்டு, கடல் பாதுகாப்பு மற்றும் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டன.
பயிற்சி முடிந்து ஈரானின் போர்க் கப்பல் நேற்று இலங்கையைக் கடந்து, இந்தியப் பெருங்கடலில் சென்று கொண்டிருந்தது. இலங்கையின் காலி துறைமுகத்திலிருந்து 75 கி.மீ., தொலைவில், சர்வதேச கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்தபோது போர்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்தியது. அதில் இருந்து செலுத்தப்பட்ட டார்பிடோ, ஈரான் கப்பலை தாக்கி மூழ்கடித்தது.தாக்குதலின் போது கப்பலில் 180 பேர் கொண்ட குழுவினர் இருந்தனர். அதில், 80 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கையை அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தினார். இது குறித்த வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார். அதில் கடலில் மிதந்து கொண்டிருக்கும் கப்பல் திடீரென வெடித்து இரு துண்டுகளாக உடைந்து மூழ்குகிறது.
தாக்குதல் குறித்து அவர் கூறுகையில், “இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்த ஈரான் போர்க் கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல், டார்பிடோவால் தாக்கி மூழ்கடித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் டார்பிடோ மூலம் எதிரி போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறை,” என்றார்.
ஈரான் கப்பலில் இருந்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. இதில், 30 கடற்படை வீரர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் இலங்கையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.

