சிறுபான்மையினருக்கு எதிராக வங்கதேசத்தில் 88 சம்பவங்கள்
சிறுபான்மையினருக்கு எதிராக வங்கதேசத்தில் 88 சம்பவங்கள்
ADDED : டிச 12, 2024 06:20 AM

டாக்கா : வங்கதேசத்தில், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தப்பியோடியதை தொடர்ந்து, ஆக., 5 - அக்., 22 வரை, ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக, 88 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக, அந்நாடு முதன்முறையாக தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, ஆக., 5ல், பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது.
ஷேக் ஹசீனா தப்பியோடியதை அடுத்து, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடந்தன. மேலும், ஹிந்து கோவில்களும் தாக்கப்பட்டன.
சமீபத்தில், வங்கதேசம் சென்ற நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசை சந்தித்து பேசினார். அப்போது, ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு அவர் கவலை தெரிவித்தார்.
இந்நிலையில், வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசின் செய்தித் தொடர்பாளர் ஷபிகுல் ஆலம் நேற்று கூறியதாவது:
ஷேக் ஹசீனா தப்பியோடியதை தொடர்ந்து, ஆக., 5 - அக்., 22 வரையிலான காலத்தில், ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக, 88 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக, 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் பணி நடக்கிறது. ஒருசில சம்பவங்களை தவிர, ஹிந்து மத நம்பிக்கை காரணமாக, ஹிந்துக்கள் தாக்கப்படவில்லை. சில சம்பவங்கள், தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்துள்ளன.
அக்., 22க்கு பின் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான விபரம் விரைவில் வெளியிடப்படும். சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடந்தால், போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு அவர் கூறினார்.