ரஷ்ய அதிபரை சந்திக்க 40 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்ட பாக்., பிரதமர்
ரஷ்ய அதிபரை சந்திக்க 40 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்ட பாக்., பிரதமர்
ADDED : டிச 12, 2025 10:15 PM

அசுகாபாத்( துர்க்மெனிஸ்தான்): ரஷ்ய அதிபர் புடினை, சந்திக்க சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 40 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இந்தியா ரஷ்யா இடையே நீண்ட காலமாக வலுவான உறவு நீடித்து வருகிறது. சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் அதிபர் புடின் மற்றும் பிரதமர் மோடி நேரில் சந்தித்தனர். சமீபத்தில் ரஷ்ய அதிபர் புடின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்து இரு நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
அதேநேரத்தில், ரஷ்யா உடன் நெருக்கமாக பாகிஸ்தானும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியா உடன் நெருக்கமாக இருந்தாலும், ரஷ்யா உடன் உறவை மேம்படுத்த விரும்புகிறோம் என சீனாவில் புடினை சந்தித்தபோது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் துர்க்மெனிஸ்தானில் சர்வதேச மாநாடு ஒன்று நடந்தது. இந்த மாநாட்டில் அதிபர் புடின், துருக்கி அதிபர் எர்டோகன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டின் இடையே புடின் எர்டோகன் ஆகியோர் தனி அறையில் நேரடி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்தனர்.
அப்போது புடினை சந்திக்க ஷெபாஸ் ஷெரீப் வந்தார். ஆனால், அவருக்கு உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை. அவருடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர்ரும் அறை ஒன்றில் காக்க வைக்கப்பட்டனர்.
உடனடியாக அனுமதி கிடைக்காத காரணத்தினால், 40 நிமிடங்களுக்கு பிறகு ஷெபாஸ்ஷெரீப் அங்கிருந்து எழுந்து புடின் இருந்த அறைக்குச் சென்றார். அவருடன் முக்கிய நபர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். புடினை சந்தித்துவிட்டு 10 நிமிடங்களில் அங்கிருந்து ஷெபாஸ் ஷெரீப் வெளியேறினார். இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

