டிரம்ப் முன்னிலையில் கம்போடியாவுடன் கையெழுத்தான ஒப்பந்தம்: நிறுத்தி வைத்தது தாய்லாந்து
டிரம்ப் முன்னிலையில் கம்போடியாவுடன் கையெழுத்தான ஒப்பந்தம்: நிறுத்தி வைத்தது தாய்லாந்து
ADDED : நவ 10, 2025 04:38 PM

பாங்காக்: கம்போடியாவுடன் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில், கையெழுத்தான ஒப்பந்தத்தை தாய்லாந்து நிறுத்தி வைத்துள்ளது.
எல்லைப் பிரச்னை காரணமாக தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. கடந்த ஜூலையில் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் 30 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இதனிடையே, டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் முதல்நிலை போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. மலேசியாவில் நடந்த ஆசியான் மாநாட்டில் அவர் முன்னிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்து போட்டனர்.
இந்நிலையில் இரு நாட்டு எல்லையில் சி சா கெட் மாகாணத்தில் புதிதாக வைக்கப்பட்ட கண்ணி வெடி வெடித்ததில், ரோந்துப் பணியில் ஈடுபட்ட தாய்லாந்து ராணுவ வீரர்கள் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். இதன் பின்னணியில் கம்போடியா இருக்கும் என்ற சந்தேகம் தாய்லாந்துக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மலேசியாவில், டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்ததத்தை நிறுத்தி வைப்பதாக தாய்லாந்து பிரதமர் அறிவித்துள்ளார்.
இது குறித்து தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் கூறியதாவது: தெளிவான முடிவு ஏற்படும் வரை அமைதிக்காக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கிறோம். நாங்கள் எதிர்பார்த்தபடி விரோதம் குறையவில்லை என்பது தற்போது நடந்த நிகழ்வுகள் காட்டுகிறது. எனவே இனியும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

