ADDED : பிப் 09, 2026 03:01 AM

ஒட்டாவா: நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் கனடா பாதுகாப்பு ஆலோசகர் நதாலி ட்ரூயின் இடையே நடந்த ஆக்கபூர்வமான பேச்சு காரணமாக, இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் நட்புறவு மலர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து காலிஸ்தான் அமைப்புகளின் செயல்பாட்டுக்கு இனி ஆதரவு அளிக்கக் கூடாது என்ற முடிவுக்கு கனடா வந்துள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரண்டு நாள் பயணமாக வட அமெரிக்க நாடான கனடாவுக்கு சென்றார். அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நதாலியை சந்தித்தார். போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பான உளவுத் தகவல்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, காலிஸ்தானி அமைப்புகளின் செயல்பாடு மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளன. பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத் துறையில் அதிகாரிகளை நியமிக்கவும் ஒப்புக் கொண்டன.
கனடாவில் காலிஸ்தானி பிரிவினைவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டதால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. தற்போது கனடாவில் புதிய அரசியல் சூழல் மற்றும் உயர்மட்ட பேச்சுகள் மூலம் மீண்டும் இரு நாட்டிற்கும் இடையே நட்புறவு மலர்ந்து வருகிறது.

