ஈரான் இடைக்கால உச்ச தலைவரானார் அலிரெஸா; தேர்வு நடப்பது எப்படி?
ஈரான் இடைக்கால உச்ச தலைவரானார் அலிரெஸா; தேர்வு நடப்பது எப்படி?
ADDED : மார் 02, 2026 01:55 AM

டெஹ்ரான்: ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, 86, இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டு படைகள் நடத்திய தாக்குதலில் பலியான நிலையில், இடைக்கால உச்ச தலைவராக அந்நாட்டின் மூத்த மத குருவான அயதுல்லா அலிரெஸா அராபி, 67, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஈரானில் உச்ச தலைவர் பதவி என்பது நாட்டின் அதிகபட்ச அதிகாரம் படைத்த பதவி. கடந்த 36 ஆண்டுகளாக இப்பதவியில் இருந்தவர் அயதுல்லா அலி கமேனி. இவர் ஈரானின் 2வது உச்ச தலைவர்.
முதல் உச்ச தலைவராக ருஹொல்லா கொமேனி இருந்தார். இவர் ஈரானில் 1979ல் இஸ்லாமிய புரட்சி மூலம் மன்னராட்சியை அகற்றி இஸ்லாமிய குடியரசு ஆட்சியை நிறுவியவர். அவர் மறைவுக்கு பின் அப்பதவிக்கு அயதுல்லா அலி கமேனி வந்தார்.
இந்நிலையில், கமேனியை இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து கொன்றன. அவருக்கு அடுத்து ஈரானின் உச்ச தலைவராக அவரது 2வது மகன் மோஜ்தபா கமேனி, 56, பதவிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரும் தந்தை கமேனியை போன்றே தீவிர மதக்கொள்கைகளை பின்பற்றுபவர். இதுவரை பின்னணியில் இருந்து ஆட்சியை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், வாரிசு ஆட்சி ஈரானின் குடியரசு கொள்கைக்கு எதிரானது. எனவே இவருக்கு உயர் குருமார்களின் எதிர்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது.
முதல் உச்ச தலைவர் ருஹொல்லா கொமேனியின் பேரன், ஹசன் கொமேனி, 54. இவருக்கும் சில மதத்தலைவர்களின் ஆதரவு உள்ளது. சமீபத்தில் இவர் தீவிர வேட்பாளராக உருவெடுத்துள்ளார். சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் மற்றவர்களை காட்டிலும் சமரச அணுகுமுறை கொண்டவராக கருதப்படுகிறார்.
இந்நிலையில், ஈரானை வழிநடத்தும் இடைக்கால உச்ச தலைவராக அயதுல்லா அலிரெஸா அராபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடன் இடைக்கால கவுன்சிலில் அதிபர் மசூத் பெஷஸ்கியான், நீதித்துறைத் தலைவர் இடம்பெறுவர். நிரந்தர உச்ச தலைவரை தேர்வு செய்யும் வரை அலிரெஸா அடங்கிய கவுன்சில் நாட்டை வழிநடத்தும்.

