ADDED : அக் 23, 2025 07:58 PM

நியூயார்க்: உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின் தேசியக் கடன் 3,339 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு அமெரிக்கரின் தலையிலும், 1 கோடி ரூபாய் கடன் உள்ளது.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் ஏற்கனவே பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் அந்நாட்டின் தேசியக் கடனும் வரலாறு காணாத அளவில் உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.அமெரிக்க நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டின் தேசியக் கடன் 3,339 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி ஒவ்வொரு அமெரிக்கரின் தலையிலும், 1 கோடி ரூபாய் கடன் உள்ளது.
கடந்த 2024 நவம்பரில் நாட்டின் மொத்தக் கடன் தொகை, 3,163 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், 3,250 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. இரண்டே மாதங்களில், ஒரு டிரில்லியன் டாலர், அதாவது 88 லட்சம் கோடி ரூபாய் கடன் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபராக இந்தாண்டு ஜன.,ல் டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு கடன் உயர்ந்துள்ளது.அமெரிக்காவின் கடன் தொகை சீனா, இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய பெரிய நாடுகளின் பொருளாதாரங்களுக்கு சமமாகும்.அரசின் செலவீனங்களுக்கும், வருவாய்க்கும் இடையிலான இடைவெளி வேகமாக அதிகரித்து வருவதே இதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் டிரம்பின் 'ஒன் பிக் பியூட்டிபுல் பில்' சட்டப்படி அதிகளவு வரிக் குறைப்பு செய்ததும் காரணம் என கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதார ஆலோசனை அலுவலக கணிப்பின்படி, 2047ம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்தக் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 200 சதவீதத்தை எட்டக்கூடும் என்று கூறப்படுகிறது.
புள்ளி விபரங்களின்படி, நம் நாட்டின் மொத்தக் கடன் 171.78 லட்சம் கோடி ரூபாயாகும். இதன்படி ஒவ்வொரு இந்தியர் மீதான கடன், 4.8 லட்சம் ரூபாயாகும்.