ADDED : அக் 07, 2025 07:34 AM

ஸ்டாக்ஹோம்: மனித நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு குறித்த முக்கியமான கண்டுபிடிப்புகளுக்காக, நடப்பாண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியலாளரும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் பெயரில், ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மனித குலத்துக்கு பலனளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது உலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படுகிறது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் என ஆறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு தங்க பதக்கம், பட்டயம், பணப்பரிசு உள்ளிட்டவை வழங்கப்படும். இவ்விருது ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10ல் வழங்கப்படும்.
அந்த வகையில் நடப்பாண்டுக் கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெயர்கள் அறிவிப்பு நேற்று துவங்கியது. இதில் முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு உரியோர் பெயர் அறிவிக்கப்பட்டது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, 'டி செல்' எனப்படும் சொந்த செல்களை தாக்காமல் தடுக்கும் முறை குறித்து முக்கிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதற்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு இவ்விருது பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மேரி பிரன்கோவ் மற்றும் பிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோர், இந்தாண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு பெற உள்ளனர்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது.