ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது 37 பேர் பலி; 1,200 பேர் கைது
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது 37 பேர் பலி; 1,200 பேர் கைது
ADDED : ஜன 08, 2026 01:01 AM

டெஹ்ரான்: ஈரானில் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதல்களில், 37 பேர் உயிரிழந்துள்ளனர்; 1,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்காசிய நாடான ஈரானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதேபோன்று வரலாறு காணாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பும் சரிந்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு எதிராக தலைநகர் டெஹ்ரானில் வணிகர்கள், பொதுமக்கள் போராட்டத்தை துவங்கினர். இந்த போராட்டம், இப்போது உச்ச தலைவர் கமேனி ஆட்சிக்கு எதிரானதாக மாறி, நாடு முழுதும் பரவியுள்ளது.
கமேனிக்கு எதிராக முழக்கமிட்டு ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். குறிப்பாக, தலைநகர் டெஹ்ரானின் பிரதான வணிக மையமான கிராண்ட் பஜாரில், நேற்று கடும் மோதல் வெடித்தது. வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால், பஜார் முழுதும் புகை மண்டலமாக காட்சியளித்தது; பலர் காயமடைந்தனர்.
கடந்த, 10 நாட்களாக நடக்கும் போராட்டங்களில், இரண்டு போலீசார் உட்பட 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 1,200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

