'நீங்கள் இறந்து விட்டீர்களா?' உயிருடன் இருப்பதை உறுதி செய்ய சீனாவின் 'ஆப்' அறிமுகம்
'நீங்கள் இறந்து விட்டீர்களா?' உயிருடன் இருப்பதை உறுதி செய்ய சீனாவின் 'ஆப்' அறிமுகம்
ADDED : ஜன 15, 2026 01:35 AM

பீஜிங்: சீனாவில், தனியாக இருப்பவர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள செயலி ஒன்று உலக அளவில் கவனம் பெற்று வருகிறது.
நம் அண்டை நாடான சீனா மட்டுமல்லாது உலக அளவில் இளம் தலைமுறையினர் இடையே, தனியாக வாழும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.
அதே சமயம் தங்களை யாரும் கவனிக்காவிட்டால் என்ன ஆகும் என்ற பயமும் பலருக்கு உள்ளது.
எச்சரிக்கை இந்த அச்சத்தை தீர்க்கும் வகையில் 'நீங்கள் இறந்துவிட்டீர்களா' என்று சீன மொழியில் கூறப்படும், 'சைலேம்' என்ற செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கிய செயல்பாடு மிகவும் எளிது. ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒருமுறை அந்த செயலியில் ஒரு பட்டனை அழுத்தி, நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இதைத் தவறவிட்டால், 48 மணி நேரத்திற்கு பிறகு செயலி தானாகவே பயனரால் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட அவசர தொடர்புக்கு இ-மெயில் அனுப்பி, 'உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் தொடர்பில் இல்லை, நேரில் சென்று பாருங்கள்' என்று எச்சரிக்கை செய்யும்.
பதிவிறக்கம் சீனாவின் ஆப்பிள் செயலி ஸ்டோரில் பணம் செலுத்தி பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளில் இது முதலிடத்தைப் பிடித்தது. லட்சக்கணக்கானோர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
சீனாவில் சைலேம் என்று அழைக்கப்பட்டாலும், உலகளாவிய பதிப்பில் 'டெமுமு' என்ற புதிய பெயரில் இந்த செயலியை அறிமுகப்படுத்த உள்ளனர்.

